Tuesday, March 7, 2017

Roof Farm-12

வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு காய்கறி விலையேற்றம் பற்றியும், விஷக் காய்கறிகள் பற்றியும் எந்தக் கவலையும் இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, காய்கறிகளை வளர்ப்பதற்காக பணத்தை அள்ளிக் கொட்டாமல், பெரும்பாலும் மண்தொட்டி, பிளாஸ்டிக் வாளி, பழைய டப்பாக்கள், தார்ப்பாலின் பைகள் என விலை குறைவான பல்வேறு உபகரணங்களில்தான் வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, கீரை... என சாகுபடி செய்கிறார்கள். இந்த வகையில், ஈரோடு மாநகரில் வசித்து வரும் நந்தினி மற்றும் கல்பனா ஆகியோர் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் மரப்பெட்டிகளில் காய்கறிச் செடிகளை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்போமா...

பழக்கடையில் தோன்றிய யோசனை!
முதலில் பேசியவர் நந்தினி. “எங்க வீட்டு மாடியில தோட்டம் அமைச்சு ரெண்டு வருஷமாச்சு. வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான உபகரணங்கள் எதையும் காசு கொடுத்து வாங்கக்கூடாதுங்கிற முடிவில் இருந்தோம். எங்க குடும்பத் தேவைக்கு மட்டும் காய்கறிகளை உற்பத்தி செஞ்சா போதும்னும் நெனைச்சோம். அதனால, பிளாஸ்டிக் பக்கெட், கிரீஸ் டப்பா, பீப்பாய்னு பழைய பொருட்களைப் பயன்படுத்தி செடிகளை வளர்க்க ஆரம்பித்தோம். ஆனா, அந்த மாதிரி பொருட்களைக் கழுவுறது பெரிய பாடா இருக்கும். அந்த சமயத்துல ஒரு பழக்கடையில காலியான மரப்பெட்டிகளைப் பார்த்தோம். அதுல செடிகளை வளர்த்தா என்னானு யோசிச்சு, சில பெட்டிகளை வாங்கிட்டு வந்தோம். பழங்கள் வர்ற பெட்டிகள்ல காற்றோட்டத்துக்காக இடைவெளி கொடுத்திருப்பாங்க. அந்த மாதிரி பெட்டிகள்ல பலகையைப் பிரிச்சு ஆணி அடிச்சு, 4 அடி நீளம், 4 அடி அகலம், 3 அடி உயரம் உள்ள பெட்டிகளா மாத்திக்கிட்டோம்.
பெட்டிக்குள்ள பிளாஸ்டிக் ஷீட் விரிச்சு, ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு ஆட்டு எரு, அரைபங்கு மண்புழு உரம்னு போட்டு 10 பெட்டிகளையும் தயார் செய்தோம். கத்திரி, தக்காளி, வெண்டை மாதிரியான செடிகள் ஆழம் அதிகமா ஊடுருவும். ஆனா, கீரை, அவரை, வெங்காயம் மாதிரியான பயிர்களோட வேர்கள் அதிகமா ஊடுருவாது. இந்த மாதிரி செடிகள் வளர்க்க பெட்டியோட உயரம் 2 அடி உயரம் இருந்தா போதும். அதுக்கேத்த மாதிரிதான் பெட்டிகளைத் தயார் செய்தோம். பெட்டியில் செடிகளுக்கு ஊத்துற தண்ணீர்ல அதிகப்படியான தண்ணீர் வெளிய வர்றதுக்கு துளைகள் அமைச்சிருக்கோம். இந்தமாதிரி மரப்பெட்டிகள்ல செடிகள் வளர்க்குறப்போ அதை தரையில் வைக்கக்கூடாது. செங்கல் கற்களை அடுக்கி அது மேல வைக்கலாம்” என்ற நந்தினியைத் தொடர்ந்தார், கல்பனா.
அவசியமான மூன்று!
‘‘மாடித்தோட்டத்தில் வளர்ந்து நிற்கிற பலவகைச் செடிகள், நகரத்தின் மாசுக்களை சுத்தப்படுத்தி நல்ல காற்றை நமக்குக் கொடுக்கிறதுக்கு துணை செய்யுதுங்க. கொஞ்சம் மெனக்கெட்டா சுத்தமான தண்ணீரையும் நம்ம வீட்டுல இருந்தே எடுத்துக்க முடியும். 50 சதுர அடி மாடிப்பரப்புல வருஷத்துக்கு 5 ஆயிரம் லிட்டர் மழைநீரைச் சேகரிக்க முடியும். அப்படி கிடைக்கிற மழைநீர்ல தேத்தான் கொட்டையைப் போட்டு வெச்சா, தண்ணீர் சுத்தமாயிடும். இப்படி கிடைக்கிற தண்ணீரைக் குடிநீரா பயன்படுத்தலாம். அதனால மாடித்தோட்டம் போடுறவங்க, மழைநீரையும் அறுவடை பண்ணணும். மாடித்தோட்டம் இருக்குற வீடுகளுக்கு ஏ.சி தேவையேயில்லை. மாடித் தோட்ட செடிகளே நம் வீட்டுல குளுகுளு சூழலை ஏற்படுத்திடும். அதே மாதிரி வீட்டுக்கழிவு நீர் போற பாதையில கல்வாழைச் செடிகளை
நட்டு வைத்தால், கழிவுநீர் சுத்தமாயிடும். இந்தத் தண்ணீரை செடிகளுக்குப் பயன்படுத்தலாம். இந்த முயற்சிகள் மூலமா... விஷமில்லாத காய்கறிகளையும் நாமளே உற்பத்தி செய்துக்க முடியும்” என்ற கல்பனா நிறைவாக,
“தூசியில்லா காற்று, மாசில்லா குடிநீர், நஞ்சில்லா உணவு... இந்த மூணும்தாங்க மனித வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயங்கள். மாடித்தோட்டம் அமைச்சிட்டா இந்த மூணும் நமக்குக் கிடைச்சுடும்” என்று சொன்னார் சிரித்தபடியே!

மண் மற்றும் நீர்ப் பரிசோதனை அவசியம்!
புறக்கடைத் தோட்டங்கள் அமைப்பது குறித்து கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காய்கறித்துறைப் பேராசிரியர் முனைவர் சரஸ்வதி நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே...
“மாடித்தோட்டத்துக்கும், புறக்கடைத் தோட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. தொட்டிச் செடிகளுக்குத் தேவையான வளமான மண்ணை வெளியில் இருந்து கூட எடுத்து வரலாம். ஆனால், புறக்கடைத் தோட்டத்துக்கு அப்படி இல்லை. நம் வீட்டு பகுதியில் உள்ள மண்ணில்தான் பாத்திகள் அமைச்சு செடிகள் வளர்க்க முடியும். அதனால், புறக்கடைத் தோட்டம் அமைக்கிறவங்க மண் மாதிரியை எடுத்து மண் பரிசோதனை செய்யணும். மண்ணின் கார, அமிலத்தன்மையைத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த பயிர்களைத் தேர்வு செய்து வளர்த்தா பிரச்னை இருக்காது. பாசனம் செய்யப் போற தண்ணீரையும் பரிசோதனை செய்து கொள்ளணும். மண் புரளும்படி நல்லா கொத்தி விட்டு, மண் கட்டிகளை உடைச்சு, பொலபொலப்பாக்கி மேட்டுப்பாத்தி அமைச்சுக்கணும். அடியுரமாக ஆட்டு எரு அல்லது தொழுவுரம் போடலாம். பஞ்சகவ்யா கரைசல்ல நாற்றுகளோட வேரை நனைச்சு நடவு செய்யணும்” என்றார்.
மகசூல் கூட்டும் மண்புழு உரம்!

விதைகள் அல்லது நாற்றுக்களை நடவு செய்த 15-ம் நாளில் மேலுரமாக ஆட்டு எருவைத் தூவி விட்டால், செடிகள் விரைவாக வளரும். 60-ம் நாளில் இருந்து 180 நாட்கள் வரை மகசூல் கொடுக்கும் காய்கறிச் செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு, ஆட்டு எரு என்று மாற்றி மாற்றி கொடுத்து வந்தால், செடிகளில் நிறைய காய்கள் பிடிக்கும்.
முட்டு கொடுப்பது அவசியம்!
கத்திரிச்செடி காய் பிடிக்கத் தொடங்கியதும் பாரம் தாங்காமல், கிளைகள் ஒடிந்து விழும் வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க ஒரு சிறிய மூங்கில் குச்சி அல்லது ரீப்பர் துண்டை தொட்டி மண்ணில் நட்டு, வைத்து செடியுடன் சேர்த்துக்கட்டி முட்டு கொடுக்க வேண்டும். அதே போல், தக்காளிச் செடிகளிலும், காய்க்கும் பருவத்தில் முட்டுக்கொடுக்க வேண்டியது அவசியம்.



(Thanks Vikatan)

No comments:

Post a Comment