Thursday, March 2, 2017

Roof Farm-10

கோயம்புத்தூர் மாநகரின் பிரதான பகுதி, ராமநாதபுரம். அங்குள்ள தங்கள் வீட்டு மொட்டை மாடியில் 1,500 சதுரடி பரப்பளவில் பல்வேறுவிதமான காய்கறிகள், கீரைகள், பழச்செடிகள், மூலிகைகள், கொடிப்பயிர்கள், கிழங்கு வகைகள்... என வளர்த்து வருகிறார்கள், பாலசண்முகம்-பானுமதி தம்பதி. அவர்களது அனுபவங்களைக் கேளுங்கள்.
ஓர் இளமாலைப் பொழுதில் மாடித்தோட்டச் செடிகளுக்கு மண்புழு உரமிட்டுக் கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேச்சை ஆரம்பித்தார் பானுமதி.
“எங்களுக்கு பூர்விகம் கோயம்புத்தூர்தாங்க. கிராமம், விவசாயம்னு எதுவுமே தெரியாத வியாபாரக் குடும்பம் எங்களோடது. வாழ்றது நகரமா இருந்தாலும், நாங்க குடியிருந்த வீடுகள் எல்லாம் கிராமத்து வீடுகள் போலத்தான் இருந்துச்சு. 20 வருஷத்துக்கு முன்னல்லாம் வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் நிறைய காலி இடம் கிடக்கும். ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலயும் வேப்பமரம், கொன்றை மரம்னு நிழல் தர்ற மரங்கள் கண்டிப்பா இருக்கும். எல்லாரோட வீட்டுலயும் கிணறும் இருக்கும். அதனால வீட்டுத்தோட்டம் அமைக்கிறது எங்களுக்கு சுலபமாயிடுச்சு. வாழை, கறிவேப்பிலை, முருங்கை, மா, கொய்யா, எலுமிச்சை, ரோஜா, மல்லிகை, முல்லை, செம்பருத்தி, துளசி, திருநீர்பத்ரி, செண்டுமல்லினு புறக்கடையே சோலைவனமா இருக்கும். வீட்டுப்பெண்கள் பெரும்பாலான நேரத்தை இந்தப் புறக்கடைத் தோட்டத்திலதான் கழிப்பாங்க. பள்ளி விடுமுறை நாட்கள்ல சின்னஞ்சிறுசுகள் எல்லாம் வீட்டு மரங்கள்ல ஊஞ்சல் கட்டி  ஆடுவாங்க.

அப்போல்லாம் விறகு அடுப்புச் சமையல்தான். அதுல கிடைக்கிற அடுப்புச் சாம்பலை எடுத்து சாணத்தோடு கலந்து புறக்கடைத் தோட்டச் செடிகளுக்கு உரமா கொடுப்போம். நொச்சி, வேப்பிலை புகைபோட்டு செடிகளுக்கு மாலை வேளைகள்ல பிடிப்போம். அதனால பூச்சிகள் வராது. புறக்கடைகள்தான் பெண்களுக்கான உடற்பயிற்சிக்கூடம். மாவாட்டுறது, அரிசி குத்துவது, தண்ணீர் இறைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதுனு ‘பிஸி’யாகவே இருந்தாங்க. அதனால 20 வருஷத்துக்கு முந்தியெல்லாம் குண்டான பெண்களையே அதிகம் பார்க்க முடியாது. எங்க வீட்டுப் பெண்களும் அப்படித்தான் இருந்தாங்க’’ என்று சொல்லி பெருமூச்சுவிட்டுக் கொண்ட பானுமதி, தொடர்ந்தார்.
‘அவள் விகடன்’ காட்டிய பாதை!
‘‘ஆனா, நாகரீக வளர்ச்சியில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தவிர்க்க முடியாததாகிடுச்சு. புறக்கடைத் தோட்டம், கிணறு, ஆட்டுக்கல், அம்மிக்கல், துவைக்கும் கல், செடி, கொடி, மரங்கள் எல்லாத்தையும் புது வீடு கட்டமைப்புக்காக தியாகம் செய்ய வேண்டிய சூழல். மாடி வீட்டுக்குக் குடி போகிறோம்னு மகிழ்ச்சியா இருந்தாலும், புறக்கடைத் தோட்டத்தை விட்டு பிரியுற சோகம் அதிகமா இருந்துச்சு.
புது வீடு, முன்வாசலும் புறக்கடையும் இல்லாத அடுக்கு மாடி வீடு. ஒரு துளசிச் செடி வைக்கக் கூட வாய்ப்பில்லையேனு மனம் வெதும்பினப்பதான், அதற்கான தீர்வு கிடைச்சது. ‘அவள் விகடன்’ பத்திரிகையின் தொடர் வாசகி நான். அதில் வீட்டுத்தோட்டம் குறித்த கட்டுரைகள், பயிற்சி குறித்து வெளியான தகவல்கள் மூலம் மாடித்தோட்டம் குறித்து தெரிஞ்சுக்கிட்டேன். உடனே மாடித்தோட்டம் அமைச்சு புறக்கடைத் தோட்ட இழப்பை நிறைவு செய்துகிட்டேன்.
இப்ப ரெண்டு வருஷமாச்சு...

தக்காளி, கத்திரி, வெண்டை, பாகல், புடல், பீர்க்கன், முருங்கை, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, வாழை, கறிவேப்பிலை, திராட்சை, மணத்தக்காளி, சிறுகீரை, அகத்தி, தண்டுக்கீரை, பசலை, வெந்தயக்கீரை, பிரண்டை, ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, செம்பருத்தி, துளசினு 26 வகை தாவரங்களை 100 பைகள்ல வளர்க்கிறோம்” என்றார் முகம் நிறைய மலர்ச்சியுடன்.
நாட்டு ரகம் மட்டும்தான்!
தொடர்ந்த பாலசண்முகம், “என் மனைவிக்கு இருந்த ஆர்வம் எனக்கும் தொத்திகிச்சு. பெரும்பாலான ஓய்வு நேரம் இந்த மாடித்தோட்டத்தில்தான் கழியுது. இங்க விளையுற எல்லா காய்கறிகளும் முழுக்க நாட்டுரகங்கள்தான். வீரிய ரகங்கள்ல விளைச்சல் அதிகம் கிடைக்கும். ஆனா, எங்களுக்கு அதுல உடன்பாடில்லை. ஒரு முறை நாட்டுரகச் செடிகளைப் பயிர் பண்ணிட்டா, அந்தச் செடிகள்ல இருந்தே விதையும் கிடைச்சுடும். அதில்லாம நிறைய கண்காட்சிகள்லயும் இப்போ நாட்டு ரக விதைகள் கிடைக்குது.
கத்திரியை நேரடியா விதைக்காதீங்க.
கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகளை நேரடியாக பைக்குள் விதைக்கக்கூடாது. குழித்தட்டு அல்லது பைகள்ல நாற்றா வளர்த்துத்தான் நடணும். பீர்க்கன், புடல், பாகல், அவரை விதைகளை நேரடியாகவே விதைக்கலாம்.
செம்மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் இதுக மூணையும் சரி பங்காகக் கலந்து பைகள்ல நிரப்பித்தான் நடவு செய்யணும். ‘சொதசொத’னு தண்ணீர் விடாமல், லேசா பாசனம் பண்ணினாலே போதுமானது. செடிகள் வளருற பைகளை தரைக்கு மேல செங்கல் அல்லது சவுக்குக் கட்டைகளை கிடத்தி, அது மேல வைக்கலாம். அப்போதான் மேல்தரை பாதிக்காது.
இஞ்சி, மிளகாய், பூண்டு மூணையும் சரி சமமாக எடுத்து அரைச்சு கொஞ்சம்  காதிசோப் கரைசல் கலந்து வடிகட்டினா... அதுதான், பூச்சிவிரட்டிக் கரைசல். இதை 5 லிட்டர் தண்ணீர்ல கலந்து செடிகள் மீது புகைபோல தெளிச்சா பூச்சி, புழுக்கள் தாக்காது” என்றார்.
தாய்வீட்டுச் சீதனம்!
நிறைவாகப் பேசிய பானுமதி, “இங்க விளையுறதுல எங்க குடும்பத்தேவைக்குப் போக மீதமுள்ளதை உறவினர்களுக்குக் கொடுத்துடுவோம். திருமணம் முடிஞ்சு சென்னையில் இருக்குற எங்க மகளைப் பார்க்க அடிக்கடி போகும்போது, அவளுக்கு இந்த இயற்கைக் காய்கறிகளைத்தான் கொண்டு போறோம். ‘எத்தனையோ சீர்வரிசைகளை தாய் வீட்டில் இருந்து வாங்கினாலும், அது பெரிசில்லை. வாரம்தோறும் தாய் வீட்டில் இருந்து வரும் விஷமில்லா காய்கறிகள்தான் என்னைப் பொறுத்தவரை உயர்ந்த சீதனம்’னு எங்க மக அடிக்கடி சொல்லுவா. மாடித்தோட்டத்தோட சிறப்பைச் சொல்ல இது ஒண்ணே போதும்” என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார்.

(Thanks Vikatan) 

No comments:

Post a Comment