Tuesday, March 7, 2017

Roof Farm-11

தமது குடும்பத்துக்குத் தேவையான விஷமில்லா காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் வீட்டுத்தோட்ட விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள், நகரவாசிகள் பலரும். அந்த வகையில் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டு மாடியில் 1,500 சதுர அடியில் வீட்டுத்தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார், லட்சுமி ஸ்ரீராம்.
மாலைப்பொழுது ஒன்றில், மலர்ந்து நிற்கும் மாடிச்செடிகளின் ஊடே வலம் வந்த லட்சுமி ஸ்ரீராமிடம் பேசினோம். ‘‘எங்க பூர்வீகம் கேரளா, பாலக்காடு. வேலை காரணமா சென்னையில் குடியேறி 24 ஆண்டுகள் ஆயிடுச்சு. எனக்குச் சின்ன வயசுல இருந்தே செடி, கொடி, மரங்கள் மேல ரொம்ப இஷ்டம். கேரளாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் பலவிதமான பழ மரங்கள், பூச்செடிகள், பச்சைக்கறிகள் (காய்கறிகள்)னு பலவகை தாவரங்களும் செழித்து நிற்கும். மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த செடிகளைப் பிரிந்து சென்னையில் குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதுல கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு.
வீட்டுத்தோட்ட ஆர்வம் சென்னை வந்தும் என்னை விட்டப்பாடில்லை. சென்னையில் நாங்க வசிச்ச வீட்டை சுத்தி கொஞ்சம் இட வசதியும் இருந்தது. அதில், மாமரம், முருங்கை மற்றும் பூச்செடிகள், காய்கறிச் செடிகளும் வச்சேன். சரி, இதையே மாடியில வளர்த்தா என்னனு எனக்குள்ள தோணிச்சு. அப்போ மாடியில் மண்தொட்டிகள்ல குரோட்டன்ஸ், ரோஜானு அழகுச் செடிகள் வளர்த்தேன். அது நல்லா வளரவும், காய்கறிச் செடிகளை வளர்க்கலாம்னு இறங்கினேன். சுத்தமான செம்மண், கொஞ்சம் மணல், கொஞ்சம் ஆட்டு எரு கலந்து மண் தொட்டியில் நிரப்பி, கீரை விதைகளைத் தூவி வளர்த்ததுல 22 நாள்ல நல்லா வளர்ந்துச்சு. இதுதான் எங்க வீட்டுத்தோட்டத்தோட முதல் பயிர். தொடர்ந்து கத்திரி, தக்காளி, மிளகாய்னு வளர்க்கத் தொடங்கினேன். தொலைஞ்சுபோன வீட்டுத்தோட்ட மகிழ்ச்சி, இந்த மாடித்தோட்டம் மூலமா மறுபடியும் நிறைவேறினதோட, 24 ஆண்டுகளா தொடருது” என்று முன்கதை சொன்ன லட்சுமி ஸ்ரீராம், தொடர்ந்தார்.
19 வகை செடிகள்!
வெண்டை, கத்திரி, கொத்தவரை, பச்சை மிளகாய், கீரைகள், முருங்கை, கோவைக்காய், திராட்சை, காராமணி, அவரை, முள்ளங்கி, புடலை, பாகல், பீர்க்கன், கறிவேப்பிலை, வல்லாரை, காந்தாரி மிளகு... என்று மொத்தம் 19 வகை செடிகளை 150 பைகள்ல வளர்க்கிறேன். வாரத்துக்கு இரண்டு முறை காய்கறிகளைப்  பறிப்பேன். வெண்டைச் செடி 30 பைகள்ல இருக்கு. கத்திரிச் செடி 20 பைகள்ல இருக்கு. கீரைகளைத் தனித்தனியாக நிறைய பைகள்ல வெச்சிருக்கேன். 3 அடி உயரம் கொண்ட 6 முருங்கைச் செடிகளும் இருக்கு. இதோட காய்கள் மட்டும் 4 அடி வரை வளரும்.
சென்னையில் 12 மாதமும் கீரை வளரும்!

வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான எல்லா உபகரணங்களும் இப்ப கடைகள்ல கிடைக்குது. ஆட்டு எருவைக்கூட தேடினால் வாங்கிடலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கிறவங்களுக்கு ஆர்வமும், விடா முயற்சியும் முக்கியம். காலையில் அல்லது மாலையில் அரை மணி நேரம் ஒதுக்கினா போதுமானது. புதிதா வீட்டுத்தோட்டம் அமைக்கிறவங்க... ஆரம்பத்தில் மிளகாய், தக்காளி, வெண்டை, கீரைகள், கறிவேப்பிலை மாதிரியான பயிர்கள்ல ஆரம்பிக்கலாம். குறிப்பாக, சென்னைப் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையில் எல்லா கீரை வகைகளும் 12 மாசமும் சிறப்பா வளரும்.
பைகளை வைக்கும்போது வெறும் தரையில் வைக்கக் கூடாது. அடுப்புக்கு கல் கூட்டுறது போல மூணு செங்கற்களை வெச்சு அதுமேல பைகளை வைக்கிறது நல்லது. செடிகளுக்கு தினம் ஒரு முறை பூவாளியில் பாசனம் செய்யணும். எக்காரணம் கொண்டும் தொட்டியில் வழிய வழிய தண்ணீர் ஊத்தக்கூடாது. அப்படி ஊத்தினா... மண்ணில் உள்ள சத்து வெளியேறிடும். அவ்வப்போது களைகளை களைய மூடாக்கையும் உபயோகப்படுத்துகிறேன். நோய்த் தாக்குதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை நீம் (வேம்பு) கலந்த பயோ மருந்தைத் தெளிக்கறது நல்லது. 15 நாட்களுக்கு ஒரு முறை ஊட்டமேற்றிய மண்புழு உரம், ஆட்டு எரு இரண்டையும் கலந்து எல்லா செடிகளுக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வரலாம்’’ என்ற லட்சுமி,
‘91-ம் வருஷம் சென்னையில் விரல் விட்டு எண்ணும் அளவுலதான் வீட்டுத்தோட்டங்கள் இருந்துச்சு. இப்போ நூற்றுக்கணக்குல மலர்ந்து கிடக்குது. பெரும்பாலும் இயற்கை வழியிலதான் எல்லா தோட்டங்களும் பராமரிக்கப்படுதுங்கிறது மகிழ்ச்சியான செய்தி.
நான்கு நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தோட தேவைக்குக் குறைந்தபட்சம் 20 தொட்டிகள்ல காய்கறிகளை விதைச்சா போதுமானது. எங்க வீட்டுத்தோட்டத்துல விளையுற காய்கறிகள்ல தேவைக்குப் போக மீதியை நண்பர்களுக்குக் கொடுத்துடுவோம்.
வீட்டுத்தோட்டம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமில்ல, மனதுக்கான புத்துணர்வையும் கொடுக்குது. அதிகாலை நேரத்தில் ஒரு மணிநேரம் வீட்டுத்தோட்டத்தில் வலம் வர்றவங்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு வெகுவா குறையறதோட, ஆக்ஸிஜன் அதிக அளவு கிடைக்கிறதால சுவாச நோய் பிரச்னைகளும் வர்றதில்லை. இதுல ஏதாச்சும் சந்தேகம்னா... என்தோட்டத்துல இருக்கிற ரோஜா, மல்லி, அரளிப் பூக்கள்கிட்ட கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி புன்னகையுடன் விடைகொடுத்தார்.

No comments:

Post a Comment